Tamil - Sugumaran kavithai muthal penuku, முதற்பெண்ணுக்குச் சில வரிகள்

Sugumaran kavithai muthal penuku


முதற்பெண்ணுக்குச் சில வரிகள்


இரவின் திரைக்குள் மறையும் திசைகள்
இரண்டு அலைவேளைகளுக்கு இடையில் மௌனம்

அல்லது

இரண்டு மௌனங்களுக்கு இடையில் அலைமீட்டல் என
கரையின் புறங்களில் கடலின் முடிவற்ற சங்கீதம்

உனது பிம்பம்
நிலைக்கண்ணாடியிலிருந்து கிளம்பி வந்ததுபோல்
நடந்து மறைந்தாள் எவளோ.

இதோ
நீ எதிர்ப்பட்ட அநாதிக்காலத்தின் ஏதோ ஒரு நொடி
ஆனந்த வெளியாக ஒளி ததும்பி
நிற்கிறது நினைவில்

இதோ
பார்வையில் அகலும் பெண்முகங்களில் எல்லாம்
உனது நீர்த்திரைக் கண்களைத் தேடி அலுக்கிறது
பொழுதின் தனிமை

பரிசுப்பொருட்களும் குதூகலமுமாய் வந்தவர்கள்
மயானம் கலைபவர்களாய்ச் சொல்லாமல் போகிறார்கள்
நட்போ காதலோ
இப்படித்தான் வாய்க்கின்றன பெண்ணே
எனது உறவுகள்

இப்போதும்
நீ வரலாம் என்று திறந்துவைக்கும் கதவுகளில்
வெறுமையின் ஒளி

இப்போதும்
மறதியின் இருளில் மெல்லச்சரியும் நாட்களின் விளிம்பில்
உனது மூக்குத்தியின் அலையும் சுடர்

உனது நேசப்பெருவெளி பசுமை தீய்ந்து
பனியில் உறைந்தது எப்போது?
உனது அன்புப்பிரவாகம் உலர்ந்து
பாறைகளின் மௌனம் திரண்டது எப்போது?

கானல்கள் உன் பதில்கள்
அறிந்தும்
என்னோடு அலைகின்றன கேள்விகள்

இனி
காத்திருக்கப் பொறுக்காது கடலின் சங்கீதம்

நாளை
நமது நேசத்தை ஒப்படைக்கப்போகிறேன்
காலத்தின் காட்சி சாலையில்.

எங்காவது
எப்போதாவது
வழிகள் கலந்து பிரிகின்றன உறவுகள்

இனி
காற்றில் ஆறும் காயங்கள்
வடுவாக எஞ்சும் உன் பெயர்

இவ்வளவும் ஏன்,
இன்னும் நான் நேசிக்கும் முதல்பெண் நீ

- சுகுமாரன்

The topic on Tamil - Sugumaran kavithai muthal penuku is posted by - Maha

Hope you have enjoyed, Tamil - Sugumaran kavithai muthal penukuThanks for your time

Tech Bluff